நீதிமன்ற தீர்ப்பை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு
முரணாகவும் நடந்து கொண்டதாக தெரிவித்து இன்றைய தினம் சாவகச்சேரி மாவட்ட
நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதேச சபை உப தவிசாளர்
செ.மயூரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர் திலகராணி, சாவகச்சேரி பிரதேச செயலர், கமநல சேவைகள் திணைக்கள
அதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது
வழக்காளி தரப்பு சட்டத்தரணி குறித்த நபர்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையாக செயற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
உள்ளூராட்சி
மன்ற முன்னாள் உறுப்பினர்களான செ.மயூரன், ஞா.கிஷோர், திலகரணி ஆகியோர்
சார்பில் மன்றில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் தனது
தரப்பினர் தனிநபர் பிடித்து வைத்திருந்த மூன்று கிராம மக்கள் பாவிக்கக்
கூடிய பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மக்கள் பாவனைக்கு மீட்டுத் தருமாரு
கோரியே கிராம மக்களோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றை தீர்ப்பை
அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தரணிகளின்
வாதத்தை கேட்ட பதில் நீதிவான் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வழக்கு
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அன்று அனைவரும் தவறாது
முன்னிலையாகுமாறு தெரிவித்து வழக்கினை ஜீன் 1 ம் திகதிக்கு ஒத்தி
வைத்தார்.
தனியாரால்
அபகரிக்கப்பட்ட இராமாவில் தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியை பொதுமக்கள்
பாவனைக்கு மீட்டுத் தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக கிராம
மக்களோடு இணைந்து மயூரன், கிஷோர், திலகராணி ஆகியோர் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர்.
குறித்த
ஆர்ப்பாட்டத்தை அடுத்து சாவகச்சேரி பிரதேசபை கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து
பிரதேச சபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தனியாரால்
அபகரிக்கப்பட்டிருந்த குறித்த வீதியை அளவீடு செய்து எல்லை வேலிகளை அகற்றி
பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே
தனியாரால் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்
செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகளை 18.01.2021
ஆம் திகதி சாவகச்சேரி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை
வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையிலும் செயற்பட்டதாக
தெரிவித்து மன்றிற்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.