சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கேரளா - திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 390 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக விராட் கோஹ்லி 166 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 110 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள் 08 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 166 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற 46 ஆவது சதம் இதுவாகும்.
இந்த சதத்துடன், தமது சொந்த நாட்டில், அதிக ஒருநாள் சதங்களை பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி தனதாக்கியுள்ளார்.
இன்றைய சதத்துடன், தமது சொந்த நாட்டில் இதுவரை மொத்தமாக அவர் 21 ஒருநாள் சதங்களை பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த சாதனை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வசமிருந்தது.
அவர் ஓய்வுபெறும் வரை தமது சொந்த நாட்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 20 சதங்களை பெற்றிருந்தார்.
அத்துடன், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமது இரண்டாவது சதத்தை பெற்ற சுப்மன் கில் அணிக்காக 116 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 97 பந்துகளில் 14 நான்கு ஓட்டங்கள் 02 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 116 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மேலும், ரோஹித் சர்மா 42 ஓட்டங்களையும், ஸ்ரேயாஷ் ஐயர் 38 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 07 ஓட்டங்களையும்,சூர்யகுமார் யாதவ் 04 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின், லஹிரு குமார 87 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த 81 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், சாமிக்க கருணாரத்ன 58 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 15 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 391 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக,நுவனிந்து பெர்னாண்டோ 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 19க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் மொஹம்மட் சிராஜ் 32 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், மொஹம்மட் சமி 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இந்திய அணி இந்தத் தொடரை 3 - 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.