விசேட தேவையுடையவர்களின் நலன்குறித்து மாவட்ட அடிப்படையில் பல நலன்புரி உதவிகளினை சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்று மேற்கொண்டு வருவதாகவும் அவர்களது தேவை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம தெரிவித்தார்.
சர்வதேச விசேட தேவையுடையவர்கள் தின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு அரசாங்க அதிபர் தலைமையில் சனிக்கிழமை(03) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
இதன்போது விசேட தேவையுடையவர்களது கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. அத்துடன் 75 விசேட தேவையுடையோர் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் இதன்போது அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வுலர்வுணவுப்பொருட்கள் வழங்குவதற்கான அனுசரனையை சிறுவர் அபிவிருத்தி நிதியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ்.சுதாகரன், பிரதம கணக்களார் எஸ்.பரமேஸ்வரன்,நிருவாக உத்தியோகத்தர் சனத் குருகுலசூரிய , சமூக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.