தென்பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த வருட இறுதியில் கொழும்பு மாநகரசபைக்கான நட்புறவு பயணத்தினை மேற்கொண்டனர்.
அதன் விளைவாக இவ்வருட ஆரம்பத்தில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க தலைமையில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயத்தினை மேற்கொண்டனர்.
இதன்போது வழங்கிய வாக்குறுதியின்படி, கொழும்பு மாநகர சபையில் காணப்பட்ட, மீள் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் இருந்த ஏழு வாகனங்கள் கொழும்பு மாநகரசபையால் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு, கொழும்பு மாநகரசபையின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் செய்த மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் தலைமையிலான உறுப்பினர் குழாமிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
அந்த வாகனங்கள் கொழும்பில் இருந்து இன்றையதினம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று மானிப்பாய் பிரதேச சபைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜே.சி.பி, உழவு இயந்திரம், டிப்பர், கப் ரக வாகனம், தண்ணீர் பவுசர் ஆகிய ஐந்து வாகனங்கள் இவ்வாறு கொண்டுவரப்பட்டது.