பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் கடந்த 22 ஆம் திகதி பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 'அபே ஜனபல' கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹக்மனவை சேர்ந்த பொலிஸ் குழுவினால் நேற்றையதினம்(29) ரத்கம பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 மற்றும் 33 வயதுடைய காலி, பூஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் ஒரு பெண் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டியவில் இருந்து பூஸ்ஸ பகுதிக்கு கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.