ஒற்றைத் தலைவலி அல்லது மைக்ரேன் (Migraine Disorder) என்பது சாதாரண தலைவலி அல்ல.
உலகம் முழுவதும் 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நரம்பியல் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.
வேலை, குடும்ப வாழ்க்கை, மனநலம் என அனைத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நோய், பல ஆண்டுகளாக அறிவியலுக்கே ஒரு புதிராகவே இருந்து வந்தது.
ஆனால் சமீபத்திய ஆய்வுகள், மைக்ரேன் குறித்து நாம் இதுவரை நம்பிய பல கருத்துகளை மாற்றி அமைக்கத் தொடங்கியுள்ளது.
மைக்ரேன் – வெறும் வலி மட்டுமல்ல
மைக்ரேன் என்பது ஒருபக்கத் தலைவலியுடன் மட்டும் முடிவதில்லை.
குமட்டல், வாந்தி,ஒளி மற்றும் ஒலிக்கு அதிக உணர்திறன்,பார்வையில் மின்னல் போன்ற ‘ஆரா’,கடும் சோர்வு, கொட்டாவி,சில உணவுகளின் மீது திடீர் ஆசை
என பல்வேறு அறிகுறிகளுடன் இது தோன்றுகிறது.
இந்த அறிகுறிகள், தலைவலி தொடங்குவதற்கு முன்பே ஆரம்பமாகலாம் என்பதே முக்கியமான விஷயம்.
‘தூண்டுதல்கள்’ என நினைத்தவை உண்மையில் அறிகுறிகளா?
சாக்லேட், காபி, வாசனை திரவியம், மன அழுத்தம் போன்றவை மைக்ரேனை “தூண்டுகின்றன” என்று பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது வேறு: பல சமயங்களில் மைக்ரேன் தொடங்கிய பிறகு தோன்றும் ஆரம்பகால அறிகுறிகள் உதாரணமாக, சாக்லேட் மீது ஆசை ஏற்படுவது தாக்குதலின் ஒரு பகுதியாக இருக்கலாம் .
மைக்ரேனால் பாதிக்கப்பட்டவர்களில் 30–60% பேருக்கு மரபணு காரணிகள் உள்ளன.
பெற்றோர் அல்லது பாட்டி–தாத்தாவுக்கு மைக்ரேன் இருந்தால், அடுத்த தலைமுறையிலும் வர வாய்ப்பு அதிகம்.
ஆய்வுகளில் இதுவரை 120-க்கும் மேற்பட்ட மரபணு அபாய அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால் மைக்ரேன் ஒரே ஒரு மரபணுவால் வருவதில்லை; ஆயிரக்கணக்கான சிறிய மாற்றங்கள் இணைந்து இதை உருவாக்குகின்றன.
முன்னர், ரத்த நாளங்கள் விரிவடைவதே மைக்ரேனுக்குக் காரணம் என நம்பப்பட்டது.
ஆனால் இப்போது விஞ்ஞானிகள் கூறுவது: ரத்த நாளங்கள் காரணம் அல்ல – அவை செயல்முறையின் ஒரு பகுதியாக மட்டும் இருக்கலாம்.
மைக்ரேன் தாக்குதலின்போது, மூளையின் மேற்பரப்பில் “Cortical Spreading Depression” எனப்படும் ஒரு மெதுவான மின் அலை பரவுகிறது.
இந்த அலை மூளை செயல்பாட்டை தற்காலிகமாக அடக்குகிறது,வலி நரம்புகளை தூண்டுகிறது,வீக்கம் மற்றும் பல நரம்பியல் அறிகுறிகளை உருவாக்குகிறது,2025 ஆம் ஆண்டு, ஒரு நோயாளியின் மூளையில் இந்த அலை நிகழ்நேரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது மிக முக்கியமான முன்னேற்றமாகும்.
மூளையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சவ்வான மெனிஞ்சஸ் பகுதியில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள், மைக்ரேனில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
ஒவ்வாமை,காலநிலை மாற்றம்,ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இவை மெனிஞ்சஸை தூண்டி மைக்ரேன் தாக்குதலை உருவாக்கலாம்.
மைக்ரேன் நோயாளிகளின் உடலில்CGRP (Calcitonin Gene-Related Peptide) எனப்படும் மூலக்கூறு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த CGRP-யை கட்டுப்படுத்தும் புதிய மருந்துகள்:70% நோயாளிகளில் மைக்ரேன் தாக்குதலை 75% வரை குறைத்துள்ளன
சிலருக்கு மைக்ரேன் முற்றிலும் மறைந்துள்ளது
மைக்ரேன் என்பது சாதாரண தலைவலி அல்ல ஒரே காரணத்தால் வரும் நோயும் அல்ல முழு உடலையும் பாதிக்கும், பல காரணிகள் இணையும் ஒரு நாள்பட்ட நரம்பியல் நிலை
அறிவியல் இன்னும் முழு பதிலை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆய்வும், மைக்ரேன் பாதிப்பாளர்களுக்கான புதிய நம்பிக்கையை உருவாக்கி வருகிறது.