நாட்டில் உள்ள சகல மாகாணங்களின் காணிகளும் நிர்ணயம் செய்யப்படும் போது வடக்கு மாகாண காணிகளை ஏன் நிர்ணயம் செய்யப்பட கூடாது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதிர்ப்புக்கு அரசாங்கம் அடிபணிந்தால் அது சமஷ்டியாட்சிக்கு இணக்கம் தெரிவித்ததாக அர்த்தப்படும் என ஸ்ரீ வங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
காணி நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக செயற்படுத்தினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் இருந்து 25 ஆயிரம் சிங்களவர்களும், 15 ஆயிரம் முஸ்லிம்களும் 24 மணிநேரத்துக்குள் பலவந்தமான முறையில் வெளியேற்றப்பட்டார்கள்.
நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை வழங்குவதாயின் இவர்களின் பரம்பரையினரை வடக்கில் மீண்டும் குடியமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் பிரகாரம் 2025,03,28 ஆம் திகதியன்று காணி திணைக்களத்தால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் சமூக கட்டமைப்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தி பாரிய எதிர்ப்பினை உருவாக்கினார்கள்.
பிரசுரிக்கப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், வர்த்தமானியை மீளப்பெறுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அரசாங்கத்தின் தீர்மானத்துக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
1931ஆம் ஆண்டு இயற்றப்பட்ட காணி நிரணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நாட்டின் சகல மாகாணங்களிலும் உள்ள காணிகள் நிர்ணயிக்கப்பட்டு, யுத்த சூழல் மற்றும் ஏனைய காரணிகளால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண காணிகள் அளக்கப்படவில்லை.
பிரசுரிக்கப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளின் காணிகளை நிர்ணயம் செய்வதற்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வடக்கு காணிகள் தமக்கு சொந்தம் என்று குறிப்பிடுபவர்கள் காணி உரித்து பத்திரங்களை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இல்லையேல் குறித்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தமது காணி என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் அதற்கான ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.இதில் என்ன பிரச்சினை உள்ளது.
நாட்டில் உள்ள சகல மாகாணங்களின் காணிகளும் நிரணயம் செய்யப்படும் போது ஏன் வடக்கு மாகாண காணிகள் நிர்ணயம் செய்யப்பட கூடாது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதிர்ப்புக்கு அரசாங்கம் அடிபணிந்தால் அது சமஷ்டியாட்சிக்கு இணக்கம் தெரிவித்ததாக அர்த்தப்படும்.நாட்டை பிளவுப்படுத்தும் பிரிவினைவாத கொள்கையுடன் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்படுகிறது. பிரிவினைவாத கொள்கைக்காகவே போராடுகிறது.
இந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக செயற்படுத்தினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் இருந்து 25 ஆயிரம் சிங்களவர்களும், 15 ஆயிரம் முஸ்லிம்களும் 24 மணிநேரத்துக்குள் பலவந்தமான முறையில் வெளியேற்றப்பட்டார்கள். நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை வழங்குவதாயின் இவர்களின் பரம்பரையினரை வடக்கில் மீண்டும் குடியமர்த்த வேண்டும் என்றார்.