கற்பிட்டி ஆனவாசல்
பகுதியில் நேற்று இரவு பீடி இலைகளை கடத்த முற்பட்ட மூவர் கற்பிட்டி விஜய
கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு
பீடி இலைகளை அனுமதிப்பத்திறமின்றி சட்டவிரோதமாக லொறியில் கொண்டு செல்வதாக
கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய
ஆனவாசல் பகுதியில் வைத்து குறித்த லொறியை மறித்து
சோதனைக்குற்படுத்தியுள்ளனர்.
இதன்போது
குறித்த லொறியில் 48 உரைகளில் 1508 கிலோ பீடி இலைகளும் 39 உரைகளில் 744
கிலோ புகையிலைகளும் 8 உரைகளில் 129 கிலோ புகையிலைத் தூளும் மறைத்து
வைத்திருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதன்போது கலேவெல பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த
பீடி இலைகள், புகையிலைகள், புகையிலைத் தூள் இந்தியாவிலிருந்து
கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது
செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்,
புகயிலைகள் மற்றும் புகையிலைத் தூள் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறி
ஆகியவற்றை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர்
இதன்போது தெரிவித்தனர்.
கைது
செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி
இலைகள், புகையிலைகள், மற்றும் புகையிலைத் தூள், கடத்தலுக்கு
பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம்
ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி பொலிஸார்
இதன்போது தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக
இந்தியாவிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு ஐஸ், கேரளா கஞ்சா, உலர்ந்த மஞ்சள்,
கிருமிநாசினிகள், திரவ உரம், ஏலக்காய் மூடைகள், கடலட்டைகள், சுறா இறகுகள்,
பாதனிகள், இலத்திரனியல் உபகரணங்கள், கடற்குதிரைகள்
கடத்தப்பட்டுவருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.