சீனாவில் பிஎப் 7 எனப்படும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தினசரி கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதேவேளை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலையடுத்து பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதனால், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது. சீனாவில் தற்போது பரவி வரும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நோய் முந்தைய அலைகளை விட அதிவேகம் கொண்டுள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டிற்குள் இந்த வைரஸ் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவிக்கையில், சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். படுக்க வைக்க இடமில்லாமல் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் தினமும் 200 உடல்கள் மேல் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.