யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் போராட்டம் நடைபெற்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுக்குமாறும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறும், அதிகரித்த வரிச்சுமை, வேதன அதிகரிப்பு, தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரியும் மற்றும் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமெனவும் அது வரையில் தமது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் வைத்திய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.