தோட்ட பெண் தொழிலாளர்கள் மத்தியில் போட்டி நிகழ்த்தி
அவர்களை மனித இயந்திரமாக்கி மகிழ்ந்திருப்பது பெண்களை இழிவுபடுத்தும் செயல்
மட்டுமல்ல ஒட்டுமொத்த மலையக சமூகத்தையும் அவமதிக்கும் செயலுமாகும் என
மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்
தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (28.02.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மலையக
மக்கள் இருநூறு வருட(1823-2023) வரலாற்று வாழ்வை அடையாளப்படுத்தி பல்வேறு
நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அடுத்த நூற்றாண்டை நோக்கிய
பயணத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார கௌரவத்தினை தமதாக்க
முனைப்போடு செயல்படுகின்றனர்.
இந்நிலையில்
ஹேலீஸ் நிறுவனம் தமது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தோட்ட பெண்
தொழிலாளர்கள் மத்தியில் மீண்டும் தேயிலை பறிக்கும் போட்டி நிகழ்த்தி
பெருந்தோட்ட தொழிலாளர் பெண்களை மனித இயந்திரமாக்கி மகிழ்ந்திருப்பது
பெண்களை இழிவுபடுத்தும் செயல் மட்டுமல்ல ஒட்டுமொத்த மலையக சமூகத்தையும்
அவமதிக்கும் செயலுமாகும். தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டியை ஒரு
நிகழ்வாக மட்டும் பார்த்து கை தட்டி பாராட்டு தெரிவிப்போர் இதை உணரும் போதே
மலையக சமூகத்திற்கு விடிவுகிகட்டும்.
நடத்தப்பட்ட
கொழுந்து பறிக்கும் போட்டியில் வெற்றி பெற்றது ஹேலீஸ் நிறுவனத்தினரும்,
தோட்ட நிர்வாகமும், பெருந்தொட்ட கம்பெனிகளுமே தவிர தொழிலாளர் சமூகமல்ல.
ஆரம்ப
காலத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை அடிமை கூலிகளாகப் பார்த்தனர்.
தொழிற்சங்க உரிமைகள் கிட்டிய பின்னர் தொழிலாளர்களாக பார்க்கப்பட்டனர்.
நடாத்தப்படும் தேயிலை பறித்தல் போட்டியின் முலம் மனித மனநிலையில் இருந்து
தோட்டப் பெண்களை இயந்திர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது
பெருந்தோட்டங்களில் ஒரு நாள் சம்பளத்திற்கு இருபது கிலோ தேயிலை பறிக்க
வேண்டும் என நிர்வாகம் கட்டாயப் படுத்துகின்றது.இந்த அளவு தேயிலையை
எங்களால் பறிக்க முடியாது என தொழிலாளர் சமூகத்தினர் விசனம் தெரிவிக்கின்ற
நிலையில் 20 நிமிடத்தில் 10 கிலோவிற்ககும் அதிகமாக ஒரு பெண் தேயிலை
பறித்து சாதனையை நிலைநாட்டியதாக அறிவிக்கப்பட்டமை கம்பெனிகளின் சதிவலை
என்று குறிப்பிட வேண்டும்.
ஒரு
மணித்தியாலத்தில் முப்பது கிலோவுக்கும் அதிகமாக பறிக்கலாம் எனும் செய்தி
இதன் மூலம் கூறப்பட்டுள்ளது. கம்பெனிகள் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ
தேயிலை கேட்கின்றன. இதனை பறிக்க முடியாது எனக் கூறுவது இவர்களின்
சோம்பேறித்தனத்தையே வெளிப்படுத்துகின்றது.நாங்கள் கொடுக்கின்ற சம்பளம்
அதிகம். இவர்களுக்கு சலுகைகள் கொடுக்க முடியாது.இவர்கள் கேட்பது கொடுத்தால்
நாங்கள் நட்டத்திலே இயங்குகின்றோம் எனக் கூறுவதற்கு இந்த போட்டி சான்றாக
அமைந்துள்ளது.
வெற்றி
பெற்ற பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட பண சான்றிதழ் பத்திரம், வெற்றி கேடயம்,
சூடப்பட்ட வெற்றி கிரீடம் என்பவற்றை காட்சிப்படுத்தி வைப்பதற்கு போதுமான
வீட்டு வசதி தோட்டத்தில் உள்ளதா? மலையக தோட்டத் தொழிலாளர்கள் 150 வருட கால
பழமை வாய்ந்த இடிந்து விடும் நிலையில், சடுதியாக தீப்பிடித்துக்
கொள்ளக்கூடிய லயத்தொடர்களிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர். 200 வருட
வாழ்வில் சந்ததி சந்ததியாக உரமாகிக் கொண்டிருக்கும் மண்ணில் வீட்டு
உரிமையோ,நில உரிமையோ இல்லாதிருப்பதற்கு பெருந்தொட்ட கம்பெனிகளும்
காரணமே.வெற்றி பெற்ற பெண்ணுக்கு நிலத்தோடு ஒரு வீடு கொடுக்கப்பட்டிருந்தால்
அது வெற்றியின் அடையாளமாக கருதலாம். ஆனால் அவ்வாறு செய்ய நினைக்காதது ஏன்?
இவ்வாறான
போட்டிகளை அறிவிக்கும் போது தொழிற்சங்கங்கள் அதனை தடுத்திருக்க வேண்டும்.
அல்லது அதில் பங்குபற்றுதலை தடுக்க தொழிலாளர்களுக்கு அறிவு தெளிவை ஊட்டி
இருக்க வேண்டும். அதனை செய்வதற்கு தொழிற்சங்ககளுக்கு துணிவு இல்லை. காரணம்
பெருந் தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ கம்பெனிகளின் காவலர்களாக
செயல்படுகின்றனர். கம்பெனிகள் தொழிலாளர்களின் உழைப்பை சூரையாட
தொழிற்சங்கங்கள் அவர்கள் உழைப்பின் மூலம் சுகபோகத்தில் கிடக்கின்றனர்.
இதுவே உண்மை.
மலையக
மக்களின் 200 வருட வரலாற்று வாழ்வுக்கு நிகழ்வு எடுத்துக் கொண்டிருக்கும்
சமூக இயக்கங்கள் தொடர்ந்து மலையக மக்களை அடிமைப்படுதி சிதைத்தழிக்கும்
சக்திகளை அடையாளம் கண்டு அவர்களின் முகத்திரையை அகற்ற கூட்டு செயற்பாட்டினை
முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.