இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் தான் கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் ,அவ்வாறு எந்தவொரு திட்டமும் தன்னிடம் இல்லை என்றார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக இ.தொ.காவுடன் வடிவேல் சுரேஷ் கூட்டணி அமைக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதுடன், இதொகா தரப்பில் இருந்தும் இது தொடர்பில் தகவல் கசியவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இது சம்பந்தமாக வடிவேல் சுரேஷிடம் வினவியபோது, அவர் அதனை நிராகரித்ததுடன், தேர்தலொன்று நெருங்கும்வேளை தனக்கு எதிராக அவதூறு பரப்பப்படும் போலி சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.