இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக்
தோட்ட புரவுன்சீக் பிரிவில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் இலங்கை செங்கொடி சங்கத்தின் தொழிலாளர் தினம் சங்கத்தின் தலைவர் செல்லையா
சிவசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றிய தலைவர் செல்லையா சிவசுந்தரம்,
இன்று தொழிலாளர்களின்
தொழில் பாதுகாப்பு,உழைப்பிற்கான ஊதியம்,வேலைத்தள உடல் நல பாதுகாப்பு,
கர்ப்பிணி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, போன்ற பல் வேறு விடயங்களும்
கேள்விக்குறியாக உள்ள நிலையில், வறுமை,மந்த போசணை, சிறுவர் கல்வி இடை
நிறுத்தம், சிறுவர் உழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இதனை எதிர்த்து
செயற்படும் தொழிலாளர்களின் போராட்டங்களும் திட்டமிட்ட வகையில்
நசுக்கப்பட்டு வருகின்றது.
200
ஆண்டுகளாக இந்த நாட்டுக்காக பாரிய பொருளாதாரத்தை உழைத்து கொடுத்த
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிரந்தர தொழில், தற்போது தற்காலிக தொழிலாக
மாற்றம் அடைந்து வரும் சூழ்நிலையில், அவர்களின் தொழில் உரிமைகளை தக்க
வைத்துக் கொள்ள போராடுவதையும், கம்பெனிகள் தொழிலாளர்களை அதி உச்ச
சுரண்டலுக்கு உள்ளாக்குவதையும் அரசு மவுனமாக பார்த்துக்
கொண்டிருப்பதற்கூடாக கம்பெனிகளுக்கு ஒப்புதல் வழங்கி வருகின்றது.
அதேபோல்
ஆடை தொழிற்சாலை தொழிலாளர்களை கம்பெனிகள் அரை அடிமைகளாக நடத்தும் விதம்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் உரிமைகள் திட்டமிட்ட வகையில்
மறுக்கப்படுதல். தொழிற்சங்க முறியடிப்புகள் என அனைத்து செயற்பாடுகளையும்
அரசு தடுத்து நிறுத்தாது மௌனமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
தொழிலாளர்கள்
மீது செலுத்தப்படும் மிளேற்சத்தனமான சுரண்டலுக்கு எதிராக தொழிற்சங்கங்கள்
செயற்படுவதை தடுத்து நிறுத்த கம்பெனிகள் எடுத்து வரும் அடாவடித்தனமான
நடவடிக்கைகளின் போதும் அரசு பாரா முகமாக இருந்து வருவதோடு தற்போது
பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்து வருகின்றது. இப்
பயங்கரவாத தடைச் சட்டம் அமல்படுத்தப்படுமாயின் எமது தொழிலாளர்கள்
அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும்.
எனவே இச்
செயற்பாடுகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சகல தொழிலாளர்களும் தொழிற்சங்க
பேதமின்றி ஒன்று திரள வேண்டும் என்பதை பறைசாற்றுகிறேன்,
இன்று
தொழிலாளர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான பாரபட்சம் வேரூன்றி விட்டது.
இந்த கட்டமைப்பு பாரபட்சங்களை தொழிலாளர்கள் ஓரணி திரண்டு எதிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.