வடமாகாண சிறு உற்பத்தியாளர்களின்
உற்பத்திகளை ஊக்குவிக்க யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் நிரந்தர
விற்பனைத் தொகுதி விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர்
ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆளுநர் செயலக வழிகாட்டலில் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூர்
சிறு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் சிறந்த சந்தை
வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் பல்வேறு வேலை திட்டங்கள் இடம்பெற்று
வருகின்றன.
அந்த வகையில் வட
மாகாண சிறு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொழும்புக்கும் சர்வதேச
மட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு யாழ். சர்வதேச விமான நிலையத்தில்
நிரந்தர உற்பத்தி கூடாரத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதே
போன்று கொழும்பில் உள்ள எமது அலுவலகத்திலும் உள்ளூர் உற்பத்தியாளர்களின்
உற்பத்திகள் தொடர்பில் விளம்பரப்படுத்தி ஓடர்களை வடக்கில் இருந்து
அனுப்பக்கூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது
தடவையாக ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் உள்ளூர் உற்பத்தியாளர்களின்
விற்பனை கூடங்கள் நிறுவப்பட்டு விற்பனையும் கண்காட்சியும் பெற்று
வருகிறது.
அதேபோன்று யாழ்
புதிய பஸ் நிலையம் மற்றும் யாழ் கலாச்சார மண்டபம் ஆகிய பகுதிகளிலும்
உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து
தொடர்ச்சியாக உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.