இலக்கியமும், கலையும், காலத்தையும், வாழ்வையும் பிரதிபலிக்கிறது. அதைப் போலவே நடிகர்களும், வாழ்வினதும், காலத்தினதும் பிரதிநிதிகளாகக் கதாபாத்திரம் ஏற்கிறார்கள்.
நடிப்பு என்பது வெறுமனே உடலை மாத்திரம் கொண்டு நிகழ்த்துவதல்ல. சொல்லிக் கொடுப்பதை நடிப்பது அல்லது எழுதிக் கொடுப்பதைப் பேசுவது என்பதற்கும் அப்பால், அந்தக் கதாபாத்திரமாக மாறுவதன் வாயிலாகவே திரையில் வெற்றியை நிகழ்த்த முடியும்.
இப்படி எண்ணற்ற கதாபாத்திரங்களை சுமக்கும் நடிகர்கள் தாம் வாழும் சூழல், தம் சக மனிதர்கள் குறித்து பிரக்ஞை கொள்ள வேண்டியதுடன், தம்மைக் கடந்து உலக கதாநாயகர்களாக எல்லா ஒடுக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராய்ப் போராட வேண்டிய பொறுப்புக்கு உரியவர்கள் ஆகின்றனர்.
உண்மையில் யார் ஹீரோ? என்ற கேள்விக்கான பதில் தூலமாக தெரியாமலே போகிறது. சாதனைகளை நிகழ்த்துபவர்கள் அல்ல ஹீரோக்கள், வாழ்விலும், வரலாற்றிலும் சாதனையை நடத்துபவர்கள் தான் ஹீரோக்கள்.
ஈழ மண் எண்ணற்ற ஹீரோக்களைக் கண்டிருக்கிறது. ஈழ மண் நிகரற்ற ஹீரோக்களைக் கண்டிருக்கிறது. தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் இந்த நூற்றாண்டின் நிகரற்ற தலைவர், நிகரற்ற ஹீரோ.
உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த நிஜமான நாயகன். எங்கள் தலைவர். விடுதலையின் நாயகனாக, ஈழத்தின் நாயகனாக, உலகத் தமிழர்களின் நாயகனாக வரலாற்றில் தன் பெயரைப் பொறித்துள்ளார். அத்தகு பெருமையை கொண்டது ஈழ மண்.
இத்தகைய நாயகர்களை திரையில் கொண்டு வரும் நடிகர்கள் நிஜத்தில் எப்படி இருக்கிறார்கள்? நிஜத்திலும் நாயகனாக ஹீரோக்கள் உள்ளனரா? தமிழ் சினிமாவில் இந்த அனுபவம் எங்களுக்கு பெரும் அதிருப்தியைத்தான் தருகிறது.
நண்பர் நடிகர் நாசர் இதைக் குறித்து பெரும் கவலையைப் பகிர்வதுண்டு. ஈழத்தில் தான் உலக சினிமாவுக்கான கதையும், களமும் இருக்கிறது. அங்கேதான் நிஜமான நாயகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் அத்த மண்ணில் அவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய படங்கள் தான் தமிழுக்கும், தமிழருக்கும் பெருமைதரக்கூடியவை என்றும், தமிழக சினிமா குறித்து பெரும் அதிருப்தியை பகிர்வதை பலமுறை கண்டிருக்கிறேன்.
பொங்கல், தீபாவளி என்று வந்துவிட்டால் வெடித்துச் சிதறும் பட்டாசுகளைப் போல தமிழக சினிமாவின் நாயகன்களான ஹீரோக்களின் படங்களும் அப்படங்கள் தொடர்பான விநியோக முகாந்திரங்களும் காணப்படுகின்றன. அந்தப் படங்களும் சினிமா வரலாற்றில் நிலைப்பதில்லை. அவர்களும் சினிமா வரலாற்றில் நிலைப்பதில்லை.
இப்போது விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் திரைக்கு வந்துள்ளது. இரு பக்க ரசிகர்களும் போட்டி மனநிலைகளை வெளிப்படுத்தி செயல்களை ஆரம்பித்துள்ளனர். படத்திற்குத் துணிவு பெயரிடுகிறார்கள். ஆனால் நிஜத்தில் அந்தத் துணிவு இருந்ததில்லை. தமிழக மக்களின் உரிமை சார்ந்த விடயங்களாக இருக்கலாம். ஈழ மக்களின் இனப்படுகொலை சார்ந்த விடயங்களாக இருக்கலாம். துணிவும் வெளிப்பட்டதில்லை. வலிமையும் வெளிப்பட்டதில்லை. அஞ்சாமையும் வெளிப்பட்டதில்லை. இன்று தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.
உலகம் எங்கும் வாழ்கின்ற ஈழத் தமிழ் மக்கள் தான் தமிழ் சினிமாவை வாழ வைக்கிறார்கள். உலக நாடுகளில் பன்மடங்கு அதிக கட்டணத்தைக் கொடுத்து ஈழ மக்கள் பார்வையிடுவதனால் தான் தமிழ் சினிமா பணத்தை அள்ளுகிறது.
இப்படி தமிழ் சினிமாவுக்கு ஈழ மக்கள் தோள் கொடுக்கும் போது, தமிழ் சினிமா ஈழத் தமிழ் மக்களுக்கு என்னத்தை செய்கிறது? தமிழ் நாட்டின் தொப்புள்கொடி உறவான ஈழ மக்கள் அருகில் வகைதொகையின்றி. மிகக் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்ட போது. ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தினார்கள். அதனைக் கடந்து எதனை செய்தது தமிழ் சினிமா? இத்தனை காலத்தில் ஒரு சில திரைப்படங்களை மாத்திரம் விரல் வீட்டு எண்ணவாம். மற்றப்படி ஈழத் தமிழ் மக்கள் சார்ந்த புரிதலை எந்தப் படங்களும் உருவாக்கியதில்லை. ஈழ மக்கள் சார்ந்து ஈழத்தவர்கள் படங்களை இயக்க ஊக்குவித்ததுமில்லை.
தமிழ் நாட்டில் எத்தனையோ மக்கள் வீடற்று தெருவில் உறங்குகிறார்கள். 100 கோடிகளை அள்ளும் ஒரு நடிகர் நினைத்திருந்தால் ஒரு கிராமத்தையே உருவாக்கலாம். அப்படிச் செய்தால் அவர் ஹீரோ. புனித் ராஜ் 46 வயதில் அண்மையில் காலமாகிய போது ஒட்டுமொத்த திரையுலகம் மாத்திரமின்றி தமிழ் உலகமே திரும்பி பார்த்தமைக்கு அவர் புரிந்த தொண்டுகள் காரணமாயின ஜோர்ஜ் குளூனி தென்சூடான் மக்களுக்காக உலக மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார்.
ஏன் விஜய், அஜித்தால் அப்படி ஒரு போராட்டத்தை செய்ய முடியவில்லை? தமிழ் நாட்டில் ஒரு ஜோர்ஜ் குளூனி பிறந்திருந்தால் இந்திய மாநிலங்கள் அனைத்தையும் திரட்டி, உலக திரைக் கலைஞர்களைத் திரட்டி ஐ.நாவின் கதவுகளை தட்டி ஈழத் தமிழருக்கு நீதி கேட்டிருப்பார். ஈழத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விஜய், அஜித், ரஜினி கமல் இந்த மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியை தன்னும் ஏற்றினார்களா? இவர்கள் எல்லாம் எப்படி ஹீரோக்கள் ஆக முடியும்?' வெறும் நடிகர்கள் தானே.
உலக நாயகன் என்று பட்டம் வைத்துக் கொள்கிறார்கள்? தளபதி என்று பட்டம் வைத்துக் கொள்கிறார்கள்? தளபதி என்றால் யார் தெரியுமா? ஈழத்தில் எத்தனை தளபதிகள் வாழ்ந்து வீரங்களை நிகழ்த்தியுள்ளார்கள் என்று தெரியுமா? உலகில் சில நடிகர்கள் திரையில் மாத்திரமின்றி திஜத்திலும் ஹீரோக்களாக வாழ்த்துள்ளார்கள். உலகில் அழகிய ஆண்கள் பட்டியல் 2023 ஆம் ஆண்டில் இடம் பிடித்திருக்கும் அமெரிக்க நடிகர் ஜோர்ஜ் குளூனி, அழகிய ஆண் மகன் மாத்திரமல்ல. தலைசிறந்த ஒரு ஹீரோவும் தான்.
திரையில் அவர் பல சாதனைப் படங்களை நடித்திருக்கிறார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்ற பன்முகங்களைக் கொண்ட குளூனி நிஜத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராகவும். ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுகிற மனிதர். அமெரிக்காவில் பிறந்த அந் நாட்டு நடிகரான குளூனி தனது திரைப்பயணம் வழியாக ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி தன் பெயரை வரலாற்றில் அழுத்தமாகப் பதித்தார்.
ஆனாலும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நடாத்திய போராட்டங்கள் அவருக்கு நிஜமான ஹீரோ என்ற பெயரைப் பதித்தது. தென் சூடானில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கோரியும். அங்கு நிகழ்த்தப்பட்ட நெருக்கடிகளுக்கு முடிவு கட்டுமாறும் வலியுறுத்தி குளூனி போராட்டங்களில் ஈடுபட்டார்.
பத்துத் தடவைகளுக்கு மேல் தென் சூடானுக்குச் சென்று அங்கு அகதிகளாக இருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள தென் சூடான் அலுவலகத்திற்கு முன்பாகவும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இவைகளால் அமெரிக்க நாட்டின் மிகப் பிரபலமான திரைப்பட நாயகனான ஜோர்ஜ் விலங்கிடப்பட்டார்.
இது போல நிஜத்தில், திரையில் திரைப்பட ஹிரோக்கள் நடத்தும் சாதனை தான் அவர்களுக்கு வீரத்தையும், புகழையும் கொடுக்கிறது.
இப்படியான முன்னுதாரணங்களை ஊடகங்களில் பகிராமல், பொங்கலுக்கு வரும் படங்களை வைத்தும், அதன் நாயகர்களை வைத்தும் ஊடகங்கள் நடாத்துகின்ற உரையாடல்களும். கொண்டாட்ட விம்பங்களும் பெரும் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
அத்துடன் இது இளைய தலைமுறையை பலியாக்கும் மோசமான நடவடிக்கையாகும். இப்படி திரைப்பட நாயகர்களை கொண்டாடும் தலைமுறைகளை உருவாக்குவதனால் ஒரு நாடும். பல தலைமுறைகளும், பிள்னோக்கி தள்ளப்படுவதும், சமூக இடர்களுக்கும் அதுவே காரணமாகும்.
நன்றி - 'உரிமை' மின்னிதழ்