இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை(21) அதிகாலை அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.10 மணி முதல் அரை மணி நேரத்திற்குள்ளாகவே மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் பிங்க் நகரத்தில் நிலநடுக்கடும் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது நிலநடுக்கம் காலை 4.22 மணிக்கு ராஜஸ்தான் தலைநகரைத் தாக்கியது. இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது.
மூன்றாவது நிலநடுக்கம் அதிகாலை 4.25 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில் 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.