வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வான்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்விற்கு மாணவர்கள் எவ்வாறு சமூகமளிக்க வேண்டும் என்பது தொடர்பிலும், மாணவர்களது ஒழுக்கம் தொடர்பிலும் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு அதிபர் மற்றும் ஆசிரியர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
பாடசாலையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி பாடசாலை மாணவர்களின் ஒழுக்க நடைமுறைக்கு மாறாகவும், காதில் தோடு அணிந்தவாறும் மாணவன் ஒருவர் குறித்த நிகழ்விற்கு சமூகமளித்துள்ளார்.
குறித்த மாணவனை அவதானித்த அதிபர், மாணவன் அணிந்திருந்த தோட்டினை கழற்றிவிட்டு மாணவர்களின் ஒழுக்கத்துடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து சென்ற மாணவன் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்து நிகழ்வு மண்டபத்தில் அதிபர், விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த போது தடியினால் அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அங்கு விருந்தினராக கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவருக்கும் சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அதிபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தையடுத்து அங்கு சென்ற பாடசாலை பழைய மாணவர்கள் குறித்த மாணவனைப் பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.