சங்கானை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காணிகளை உரிய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்றையதினம் சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமானது.
சங்கானை கலாச்சார மண்டபம் அமைந்துள்ள காணியானது வலி. மேற்கு பிரதேச சபையினுடையது என கடந்த 12.09.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காணியின் ஆவணங்களை பிரதேச சபையினர் அடுத்த (இன்றைய கூட்டம்) கூட்டத்தில் சமர்ப்பிக்கா விட்டால் குறித்த காணியும் கட்டடமும் புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சிடம் வழங்கப்படும் என கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதனையடுத்து தவிசாளர் இன்றையதினம் காணியின் ஆவணங்களை கூட்டத்தில் உரிய தரப்பினரிடம் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் குறித்த கலாச்சார மண்டபம் கையளிப்பது தொடர்பான விடயம் பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களிலும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த விடயம் இன்றைய நிகழ்ச்சி நிரலில் இருந்து திடீரென நீக்கப்பட்டது. குறித்த விடயம் அடுத்த கூட்டத்தில் பேசப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்கானை பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் கிராம சேவகர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.