கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் வரும் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை சர்வதேச பலூன் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலூன் திருவிழா நடைபெறவுள்ள இடத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இது குறித்து அமைச்சர் கூறுகையில், “தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் பொள்ளாச்சியில் முதல் முறையாக சர்வதேச பலூன் திருவிழா அடுத்த மாதம் 12ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மெக்சிகோவில் நடந்த பலூன் திருவிழாவில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறையின் பலூனும் கலந்து கொண்டுள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பலூன் திருவிழா நடத்தப்படவில்லை. அடுத்த மாதம் நடக்கும் பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, வியட்நாம், ஸ்பெயின், அமெரிக்கா உள்பட 8 நாடுகளில் இருந்து பலூன்கள் கொண்டு வரப்படுகின்றன.