கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு
திறக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(11) மாலை பொலிஸ் நிலைய திறந்த
வெளியரங்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன்
பக்கீர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது
நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா
அதிபர் கித்சிறி ஜயலத் ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை உதவி பொலிஸ்
அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக , பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ்
உத்தியோகத்தர்கள் , உட்பட சர்வமத தலைவர்கள், மற்றும் கிராம சேவை
உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில்
பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
அத்துடன்
இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்களின் ஆசிர்வாத சொற்பொழிவு இடம்பெற்றதுடன்
இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுடன் நிகழ்வு ஆரம்பமானது.
இதன்
போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் நன்றி உரையினை சமூக
பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம்
வாஹீட் மேற்கொண்டார்.
பொலிஸாரினால் ஏற்பாடு
செய்யப்பட்ட சிறப்பு ரமழான் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அங்கிருந்த மக்களிடம் சிநேக
பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
மேலும்
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க ,கல்முனை உதவி பொலிஸ்
அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக ,கல்முனை தலைமையக பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ,உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளுடன்
பொதுமக்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து பல்வேறு
ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.