தாயின் பராமரிப்பு செலவுக்கு தனது தங்கை காசு அனுப்ப பிந்தியதால் தனது தாயை வயோதிபர் மடத்தில் சேர்ப்பதற்கு முயன்றுள்ளார் யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் நிர்வாக தரத்தில் இருக்கும் அதிகாரி. குறித்த அதிகாரியின் தாய் பாரிசவாத நோயினால் தாக்கப்பட்டு தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகின்றார் அதிகாரி.
தாயைப் பராமரிப்பதற்காக வேலைக்காரி ஒருவரையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார். குறித்த வீடு அதிகாரியின் மனைவியின் சீதன வீடு என தெரியவருகின்றது. இந் நிலையில் தாயின் பராமரிப்பு செலவுக்கு என கனடாவில் உள்ள அதிகாரியின் சகோதரி மாதாமாதம் பணம் அனுப்பி வருவது வழமை. கடந்த மாதப் பராமரிப்பு காசை சகோதரி அனுப்பவில்லை என அதிகாரி சகோதரியுடன் முரண்பட்டதாகத் தெரியவருகின்றது.
குறித்த பணத்தை அடுத்த மாதம் சேர்த்து அனுப்புவதாகத் தங்கை தெரிவித்த போதும் அதிகாரி அதற்கு உடன்படவில்லையாம். இந் நிலையில் தங்கை தொலைபேசித் தொடர்பை துண்டித்ததுடன் அண்ணன் பல தடவைகள் தொலைபேசி எடுத்தும் பதிலளிக்கவில்லை என தெரியவருகின்றது.
இதனையடுத்து தனது தாயை வயோதிபர் மடத்தில் சேர்ப்பதற்கு அதிகாரி முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்த குறித்த அதிகாரியின் தாயின் சகோதரிகள் அவரை தமது வீட்டுக்கு கூட்டிச் சென்று பராமரித்து வருவதாகவும் இதனால் தாயின் சகோதரிகளும் அதிகாரிக்கும் முரண்பாடு எழுத்து பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது. இந் நிலையில் அதிகாரியின் மனைவி பொலிசாருடன் முரண்பட்டு பொலிசாரினால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அதிகாரி தாயைப் பாராமரிக்க வைத்திருந்த வேலைக்காரப் பெண்ணின் சம்பளமும் இருமாதங்களாகக் கொடுக்கப்படவில்லை என்றும் இதனை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என பொலிசாரால் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரியின் மனைவி பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.