தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது.
இதனையொட்டி கடந்த சில நாட்களாக வணிக ஸ்தலங்கள் மற்றும் வீதியோரங்களில் பொங்கல் பானை மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்திலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக யாழ் சங்கானை பகுதிகளில் வழமையாக களைகட்டும் பொங்கல் வியாபாரங்கள் இம்முறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பானை மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இதனால் பொங்கல் பண்டிகையை கூட கொண்டாட முடியாத ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அதேவேளை இம்முறை யாழின் பல்வேறு இடங்களில் மண்ணால் ஆன பொங்கல் பாணைகள் அதிகளவில் மக்கள் கொள்வனவு செய்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.