"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் பின்னர் நடத்திய
சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும் அரசியல்
தீர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை தொடர்பிலும் அதில் மாற்றம்
தேவை என்ற அடிப்படையிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய
வெளிவிவகார செயலர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு எழுதிய கடிதம் நேற்று
அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதை இந்தியத் தூதரக அதிகாரிகள் என்னிடம்
உறுதிப்படுத்தினர்." என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்
பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்
தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்தியத் தூதுவர்
கோபால் பாக்லே நேற்றுமுன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்தச்
சந்திப்பின்போது இரா.சம்பந்தனால் இந்தியத் தூதுவரிடம் கடிதம்
கையளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"அரசியல் தீர்வு
விவகாரத்தில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை - இந்திய ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதிலுள்ள 13ஆவது
திருத்தம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய - இலங்கை ஒப்பந்தமும்
முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேவேளை 13ஆவது திருத்தத்திலுள்ள
பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
அரசியல் தீர்வு
ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் இதில் கட்டாயம் மாற்றம் தேவை என
வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம்
எழுதியுள்ளேன்.இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும்
பிரதியிட்டுள்ளேன். இந்தக் கடிதங்களை எம்மைச் சந்தித்த தூதுவர் கோபால்
பாக்லேயிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைத்திருந்தேன்.
இந்தியத் தூதரக அதிகாரிகள் நேற்று தொடர்பு கொண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தினர். எமது தமிழ் மக்களுக்கு நான் சொல்லக் கூடியதெல்லாம், பொறுமையாக இருங்கள். அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று நம்புகின்றோம்." - என்றார்