வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று மாலை அழகையா மகேஸ்வரன் என்பவரே இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
விவசாயியான அவர், தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பக்கத்து தோட்டத்தில் நின்ற ஒருவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து இந்த கொலை நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரும், 39 வயதான சந்தேகநபரும் முன்னாள் போராளி என கூறப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் மீது சுமார் 5 வரையான வழக்குகள் உள்ளது எனவும் கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினமே தண்டப்பணத்தை செலுத்தி விட்டு வந்து, மற்றொரு இடியன் துப்பாக்கியை பெற்று அதன் மூலமே சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.