எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் என ஆறு தரப்பினர் ஒன்றிணைந்து மிகப் பெரிய கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதன் ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுதந்திரக்கட்சியின் அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் காங்கிரஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன அணியினர், இலங்கை மக்கள் கட்சி,43 வது படையணி ஆகியவற்றை இணைந்து இந்த கூட்டணி அமைக்கப்பட உள்ளது.
இந்த அணிகளில் 12 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. விரிவான கூட்டணியாக வலுவாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காண்பது புதிய கூட்டணியின் நோக்கம் எனவும் அந்த அரசியல் முக்கியஸ்தர் மேலும் தெரிவித்துள்ளார்.