எமக்கு பணமோ, பொருளோ வேண்டாம். எமது உறவுகள், எமது பிள்ளைகளை எமக்கு பெற்றுத்தர வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் ரணில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதியினை வழங்கி எமது பிரச்சினைகளை தீர்வுகாண முடியாது.
எமக்கு பணமோ, பொருளோ வேண்டாம். எமது உறவுகள் எமது பிள்ளைகளை எமக்கு பெற்றுத்தர வேண்டும். அதற்கான தீர்வையும் தரவேண்டும் என வலியுறுத்தியே தாம் கடந்த 14 வருடமாக போராட்டங்களை நடத்திவருகிறோம்.
O.M.P அலுவலகம் திடீர் திடீர் என புதிய புதிய அலுவலகங்களை திறந்து வைக்கின்றார்கள். அவர்கள் எதும் எமக்கு தெரியாமல் எவருக்கும் இழப்பிடு வழங்குகிறார்களோ தெரியாது.
இதுவரையில், எமக்கு நிதி வழங்கப்படவில்லை. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எவருக்கும் பணம் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிடம் கூட கதைத்து வருகிறோம். எந்தவித தீர்வும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கென நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதி எந்த வகையிலும் தமக்கு கிடைக்கப் பெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.