"எங்கள் இனத்தின் அடையாளம் தமிழ்" எனும் தொனிப்பொருளில் யாழ். பொன்னாலை வெண்கரம் படிப்பக மாணவர்களால் உலக தாய்மொழி தினம் நேற்றையதினம்(11) அனுஸ்டிக்கப்பட்டது.
வெண்கரம் படிப்பக மாணவி அபிநயா தலைமையில் வெண்கரம் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஆசிரியருமான திருமதி நி.சுமித்ரா நெறிப்படுத்தியிருந்தார்.
கலை நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் வழங்கி மாணவர்களது தமிழாற்றலை பாராட்டியதுடன் மாணவர்கள் தமிழ் பண்பாட்டு உடையில் கலந்து கொண்ட பெருமைக்குரிய செயற்பாட்டை வாழ்த்தினார்.
தாய்மொழி தினத்தை பிறந்த தினமாக கொண்ட எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஷ் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, அவருடைய தாயார் திருமதி. செல்லையா பவளவள்ளி, மாணவர்களுக்கு பயனுள்ள புத்தகங்களை பரிசாக வழங்கி வைத்தார்.
நிகழ்வுகளின் இறுதியாக "தமிழ்மொழி எங்கள் இனத்தின் அடையாளம். நாம் தமிழர். தமிழால் கையொப்பமிட்டு தாய்மொழியின் பெருமையை அடையாளப்படுத்துவோம்" என்ற மாணவர்களது பிரகடனம் விழாவை அர்த்தப்படுத்தியது.
தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் வெண்கரம் படிப்பக மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.