அமெரிக்காவில் உள்ள கொலொரடோ என்ற பகுதியில் சாதாரணமாக வெட்டப்பட்ட ஒரு கோழி மரணிக்க மறுத்து 18 மாதங்கள் உயிரோடு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
லோய்டி ஓல்சென் என்ற விவசாயி தனது இரவு உணவுக்காக ஒரு கோழியை சமைக்க முடிவு செய்தார்.அதற்காக வெட்டிய கோழி தான் மைக். வெட்டிய பின்னும் அது தரையில் நின்று சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது. இரை தேட முயற்சிப்பது போன்ற கோழியின் நடவடிக்கையைப் பார்த்த லோய்டி அதிர்ந்து போனார்.
தலையில்லாமலும் உயிரோடு இருந்ததால் அதனை அப்படியே வளர்க்க முடிவு செய்தார். லோய்டி அந்த 5 மாத கோழியை கோடாரி கொண்டு வெட்டும் போது கழுத்து நரம்பு சரியாக அறுக்கப்படவில்லை.
மேலும், மூளையின் பெரும்பகுதியும் சேதமடையாமல் இருந்துள்ளது.தண்ணீர் மற்றும் பால் கலந்து மைக்குக்கு உணவாக தொண்டையில் ஊட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் பிரபலமான பத்திரிகைகளில் தோன்றியதால் மைக் அமெரிக்கா முழுவதுமே புகழ்பெற்றது. மைக்கைப் பார்க்க மக்கள் குவிந்தனர். அவர்களிடம் 25 செண்ட் விதம் வசூலிக்கப்பட்டது.
அந்த கோழி அதன் வாழ்நாளில் 47,500 டாலர்கள் சம்பாதித்தது. ஊர் ஊராக அதனைத் தூக்கிச் சென்று மக்களிடம் காட்டி பணம் சம்பாதித்தனர்.
அப்படி ஒரு சுற்றுப் பயணத்தில் இருந்து வரும் போது மூச்சுத் திணறி இறுதியாக உயிரிழந்தது மைக்.
இப்போது இந்த கோழியின் பெயரில் ஒரு நிறுவனமே உருவாகியிருப்பதுடன் அங்கு ஆண்டுதோறும் தலையில்லாத கோழி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.