இரண்டு தடவைகள் உலக சம்பியனான ஆர்ஜன்டீனாவுக்கும் , குரோஷியாவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதி கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண போட்டி லுசெய்ல் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
உலகின் அதிசிறந்த கால்பந்தாட்ட விரருக்கான பெலன் டி'ஓர் விருதை வென்ற 10ஆம் இலக்க ஜேர்சிகளுடன் விளையாடும் இரண்டு வீரர்களும், உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இரண்டு தலைவர்களுமான லயனல் மெஸிக்கும் லூக்கா மொட்ரிச்சுக்கும் இன்றைய அரை இறுதிப் போட்டி மிக முக்கியம்வாய்ந்த போட்டியாக அமையவுள்ளது.
கால்பந்தாட்டத்தின் உயரிய வெற்றிக்கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு அவர்கள் இருவருக்கும் இது கடைசி சந்தர்ப்பமாக அமையவுள்ளது.
கால்பந்தாட்ட விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ணத்தை தத்தமது நாட்டிற்கு வென்றுகொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் விளையாடிவரும் லயனல் மெசி, லூக்கா மொட்றிச் ஆகிய இருவரில் ஒருவரது அணிக்கே இறுதிப் போட்டிக்கு முன்னேறக் கூடியதாக இருக்கும்.