கோட்டை ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு வழங்குவதற்கு காலம் தாழ்த்தப்பட்டமை குறித்து ஏற்பட்ட தகராறு காரணமாக கைது செய்யப்பட்ட அரகல போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான தானிஷ் அலி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் நேற்றையதினம் ரயில்வே உத்தியோகத்தர்கள் மற்றும் தானிஷ் அலி இடையே முரண்பாடு ஏற்பட்டது.
இதன்போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் தானிஷ் அலியை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் கைது செய்து கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் தனக்கு ரயில்வே உத்தியோகத்தர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து காயமடைந்த தானிஷ் அலி பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் தானிஷ் அலி இன்று (28) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.