ஈழத்தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்பதை தர்சன் செல்வராஜா புலப்படுத்தியுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
பிரான்ஸில் பாண் தயாரிக்கும் போட்டியில் இலங்கையை சேர்ந்த தர்சன் என்பவர் முதலிடம் இடம்பிடித்திருந்தார். அவருக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரான்ஸில் நடைபெற்ற மிகச்சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் பிரான்ஸை சேர்ந்த இலங்கையரான தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றுள்ளார். அத்துடன் ஒருவருடத்திற்கு அரச மாளிகைக்கு அதனை விநியோகிக்கும் உரிமையையும் அவர் பெற்றுள்ளார் அவருக்கு எமது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கையைசேர்ந்த அவர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இங்கிருந்து புலம் பெயர்ந்து சென்று அந்நிய தேசம் ஒன்றில் சாதித்துள்ளமை எம்மை பூரிப்படைய செய்கின்றது.
அவரது இந்த செயற்பாடு ஈழத்தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்ற உண்மையை மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் நாங்களும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் அவரது வெற்றி புலப்படுத்தி நிற்கின்றது.
தர்சன் செல்வராஜா வவுனியாவில் நீண்டகாலம் வசித்து வந்ததுடன் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தின் பழையமாணவரும் ஆவார். அவரது வெற்றி எமது பாடசாலை சமூகத்துக்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் தனது தொழிற்துறையில் மேலும் பல சாதனைகளை செய்து உயர்ச்சி பெறுவதற்கு ஈழத்தழிழ்மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
இதேபோல இலங்கையிலும் பல தமிழ் இளைஞர்கள் திறமைகள் இருந்தும் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்படாமையால் சாதிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கான உரிய சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படும் பட்சத்தில் உள்நாட்டிலும் அவர்கள் பல்துறைகளில் பிரகாசிக்க கூடிய நிலமைகள் ஏற்ப்படும். என்றார்.