நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் இடம்பெற
இருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு அனைவரையும் வருமாறு ஆலய பொங்கல் உற்சவ
குழுவினர் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு
மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(18) காலை 8 மணிக்கு பொங்கல்
நிகழ்வினை செய்யவுள்ளதாகவும் குறித்த பொங்கல் நிகழ்வுக்கு அனைவரையும்
அணிதிரண்டு வருமாறும் குருந்தூர் மலை பொங்கல் உற்சவ ஏற்பாட்டு குழுவினால்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த
மாதம் பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்ட வேளை
தொல்லியல் திணைக்களத்தினாலும், சகோதர மொழி பேசுபவர்களாலும் தடுக்கப்பட்ட
சம்பவம் நடைபெற்றது.
அது தொடர்பாக நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை
நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று கடந்த ( 08.08.2023) வழக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டதில் அது தொடர்பாக பதிலளிப்பதற்காக தொல்லியல்
திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது.
அன்றையதினம்
தொல்லியல் திணைக்களம், சட்டமா திணைக்களத்தினுடைய அரச சட்டத்தரணி ஊடாக
தோன்றி தாம் எந்த விதத்திலும் அங்கே சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபடதடை
செய்ய இல்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு
நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் எதிர்வரும் (18.08.2023) அன்றையதினம் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தில்
பொங்கலினை மேற்கொள்ளவுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுனர்களால் அனுமதி
பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.