வறுமைக்கோட்டிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (14.03.2023) முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் , கரைதுறைப்பற்று பிரதேச செயலகங்களில் நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
சுப்ரமணிய ஐயப்பா மற்றும் கனடா கியுபெக் அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் அனுசரணையுடன் வாழ்வாதார வசதிகளில் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள் மற்றும் கற்பிணி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்பட்டது.
10 இலட்சம் பெறுமதியான இந்த திட்டத்தில் 100 பயனாளர்களுக்கு கோழிக்குஞ்சுகளும் 160 பயனாளர்களுக்கு வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாக விதைதானியங்கள், பசளை என்பன வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி க.பவானி, பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.