ஹர்த்தாலுக்கு இதுவரை ஆதரவா? இல்லையா? என்பது குறித்து சங்கம்
முடிவு எடுக்கவில்லை என கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம். சித்தீக்
குறிப்பிட்டார்.
வடக்கு -
கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால்
அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு
இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு
எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட
அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது
பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை வழமை போன்று கடைகள் மூடப்படும். ஹர்த்தால்
விடயமாக எந்த தரப்பும் இதுவரை எம்மை தொடர்பு கொள்ளவில்லை. இந்த விடயம்
குறித்து எமக்கு தெரியாது.
சந்தைகள் வழமை போன்று இயங்கும் என குறிப்பிட்ட
அவர் ஹர்த்தால் தொடர்பில் இதுவரை எமக்கு அறியத்தரவில்லை என்பதுடன் அவ்வாறு
அறிவித்தால் எமது சங்கம் பரிசீலனை செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.