திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி சங்கமன்
கிராமங்களில் மலைகளை உடைந்து கல்குவாரி அமைப்பதற்கான விண்ணப்பங்கள்
அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பில் பிரதேச செயலாளரின் அனுமதி
இல்லாமல் ஏனைய திணைக்களங்களங்களால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், இது
பிரதேசத்திற்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவனவாக இருப்பதால் பிரதேச
அமைப்புகள், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைய இதனை இடைநிறுத்துமாறும்
தெரிவித்து மேற்படி கிராம மக்களின் சார்பாக அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களால் திருக்கோவில் பிரதேச அபிவிருத்திக்
குழுக் கூட்டத்தில் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டது.
இதனை
ஆராய்ந்த அபிவிருத்திக் குழு தற்போதைய கால சூழ்நிலையில் இதற்கான தேவை
இல்லாமலிருப்பதாலும், பிரதேச மக்களின் எதிர்ப்பு காணப்படுவதாலும், பாரிய
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இவ்வாறானதொரு
கல்குவாரி அவசியமானதொன்றல்ல எனவும் தெரிவித்து இவ் அனுமதியை
இடைநிறுத்தியது.
திருக்கோவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்
பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினருமான டபிள்யு.டி.வீரசிங்க தலைமையில் இடம்பெற்ற போது இவ்விடயம்
பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவிக்கையில்,
திருக்கோவில்
பிரதேச செயலாளரின் அனுமதியோ, ஆலோசனைகளோ பெறாமல் இதற்கான அனுமதிகள்
வழங்கப்பட்டிருக்கின்றன. வனவளபாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி இல்லாமல்
சாதாரண குடிமகன் ஒருவர் அப்பிரதேசத்திற்குள் செல்லவும் முடியாது எதுவும்
செய்து விடவும் முடியாது. ஆனால், வனவளப் பாதுகாப்புத் திணைக்களம், மத்திய
சுற்றாடல் அதிகார சபை, புவிச்சரிதவியல் திணைக்களம் போன்றன பிரதேச
செயலாளரின் அனுமதி இல்லாமல் கல்குவாரிக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக நான்
அறிகின்றேன்.
இது தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொது அமைப்பின்
பிரதிநிதிகள் பல முறைப்பாடுகளை என்னிடம் முன்வைத்துள்ளனார். ஏற்கனவே
இவ்வாறு தாண்டியடியில் கல்குவாரி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட போது
அங்கு பாரிய பிரச்சனை ஏற்பட்டது. மக்கள் செறிந்து வாழுகின்றதும்,
கால்நடைகள் வளர்ப்பதுமான இடங்களாக இருப்பதால் பிரதேச செயலாளர் உட்பட நானும்
நேரடியாகச் சென்று களஆய்வு செய்து சில தடைகளை பிரதேச செயலாளர்
ஏற்படுத்தினார்.
எனவே இந்தப் பிரதேசத்தில் இவ்வாறு மலைவகள்
உடைக்கின்ற, கல்குவாரி அமைப்பது தொடர்பான விடயங்கள் கையாளப்படுகின்ற போது
இங்குள்ள பிரதேச செயலாளரின், மக்கள் அடிப்படை அமைப்புகளின் நிலைப்பாடுகளை
அறிந்தே இதற்குரிய அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் பாரிய
பிரச்சினை எமது பிரதேசத்தில் எழுந்திருக்கின்றது.
எனவே இது
தொடர்பில் பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள் தங்கள் கருத்துகளை வழங்க
வேண்டும் என்பதுடன், இதனை தடைசெய்வதற்கான தீர்மானத்தையும் இப்பிரதேச
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதனைத்
தொடர்ந்து பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் இக் கல்குவாரி
அமைப்பதால் ஏற்படுகின்ற பாதக நிலைமை குறித்து தெளிவு படுத்தினர்.
அதன்
பின்னர் பொது அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பின் காரணமாக
தற்போது நாட்டில் எவ்வித பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளும் இடம்பெறாத
நிலையில் சூழலுக்குப் பாதமாக அமையும் இவ்வாறான கல்குவாரி அனுமதிகள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அபிவிருத்திக் குழுத் தலைவரால் தீர்மானம்
எடுக்கப்பட்டது.
இதே வேளை இல்மனைட் அகழ்வினை தடை செய்து பிரதேச
அபிவிருத்திக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி இல்மனைட்
தொழிற்சாலை அலுவலக வேலைகள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் முறைப்பாடு
செய்தனர். பிரதேச அபிவிருத்திக் குழுத் தீர்மானமே இறுதியானது இதனை மீறி
யாரும் செயற்படுவார்களாக இருந்தால் பாதுகாப்புப் பிரிவினர் எதுவித
பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபிவிருத்திக் குழுத்
தலைவரால் இதன் போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.