ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தகால ஆட்சியின்போதே இலங்கை படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது என யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு சங்க தலைவர், ரத்னசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களிடம் ம்கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
"நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த கால ஆட்சியே காரணம். குறிப்பாக மத்திய வங்கிக் கொள்ளையில் ரணிலின் கட்சிக்கு பங்கு இருக்கிறது. அது இவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான குற்றமாக காணப்படுகிறது.
சர்வதேச நாடுகள் தற்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கான பயணத்தடைகளை விதித்து வருகிறது. இதேபோல எதிர்காலத்தில் பொருளாதார குற்றங்களுக்கான தண்டனையும் வழங்கப்படலாம். அவ்வாறானவர்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள காரணத்தால் தாம் வெற்றி பெறுவோம் எனும் எனும் நம்பிக்கை இவர்களிடம் இருக்கிறது. அது ஒரு காலத்திலும் நடக்காது. ஏனெனில் ந்த்தெற்கில் உள்ள சிங்கள மக்கள் இவர்களை அறவே வெறுத்துள்ளார்கள்.
வடக்கின் நிலை வேறு. சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே சில சபைகளில் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், இம்முறை அவர்கள் சரிவை எதிர்நோக்குவார்கள். உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பின்னர் போராட்டங்கள் மேலும் வலுப்பெறலாம். இதன்மூலம் ரணிலின் ஆட்சியும் ஆட்டம் காணலாம். இதன் மூலம் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டிய ஓர் தேவை ஏற்படும்.
அப்படி நாடாளுமன்றம், கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் ஓர் சுமுகமான நிலை உருவாகும்." எனத் தெரிவித்தார்.