மீண்டும் ஒரு போராட்டம் ஆரம்பிப்பதற்கு
முன்னர் எங்களுக்கான தீர்வினை சர்வதேசமும் புலம்பெயர்ந்த தமிழர்களும்
பெற்றுத்தரவேண்டும் என
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.
மட்டக்களப்பில்
மேச்சல் தரவைக்காக போராட்டத்தினை மேற்கொண்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு
ஆதரவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் போராட்டத்தில்
ஈடுபட்ட வேளை அவர்கள் மீது பொலிசார் மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியதில்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(09) ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியிருந்தது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு
மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி,
முல்லைத்தீவு
மாவட்டத்தில் தொடர்ச்சியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த
நிலையில் நேற்று (08) மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை
மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
வரும் வேளை அங்கு நடைபெற்ற மேச்சல் தரை கோரிய கால்நடை பண்ணையாளர்களின்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாய்மார்கள் சென்றுள்ளார்கள்.
இதன்போது
போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாருக்கு மிருகத்தனமாக பொலிசார் தாக்குதல்
மேற்கொண்டதில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சங்கத்தலைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றார்.
பாதிக்கப்பட்ட
தரப்புக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளும் பொலிசாரும்
புலனாய்வாளர்களும் அவர்களை அடித்து நொருக்குவதில் நியாயம் இல்லை
எங்களுக்கான
நீதிக்காகத்தான் நாங்கள் தொடர்ச்சியாக போராடுகின்றோம் தமிழர்களின்
உரிமைகள் எதுவும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை மேச்சல் தரை போராட்டம்
என்பது பொதுவான போராட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான
போராட்டத்தில்தான் ஈடுபட்டுள்ளார்கள் இதற்கான தீர்வினை கொடுக்காமல்
மிலேச்சத்தனமாக பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளமை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
எந்த
மாவட்டத்தில் இருந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு
கைவைத்தால் போராட்டத்தினை மேற்கொள்வோம் நியாயம் கிடைக்கும் வரை
பாதிக்கப்பட்ட தரப்பிற்காக குரல் கொடுப்போம். பாதிக்கப்பட்ட தரப்பிற்கான
தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வரை நாங்கள் போராடுவோம் நாங்கள் பொருட்களை
தொலைத்துவிட்டு போராடவில்லை பெறுமதியான உயிரை கொடுத்துவிட்டு
போராடுகின்றோம் இனவாதத்தினை மதவாதாம் ஆக்கி முழுமையாக தமிழர்களை
தீண்டிக்கொண்டிருக்கின்றார்கள் இவற்றை நாங்கள் கண்டிக்கின்றோம்.
பாராளுமன்றத்தில்
உள்ள அரசியல் பிரதிநிதிகள் மீதும் பொலிஸ் தாக்குதல் நடத்துகின்றார்கள்.
நீதிபதிக்கு நியாயம் கிடைக்கவில்லை பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கும்
பாதுகாப்பு இல்லை ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஒருபோதும் ஓடமாட்டார்கள்
தட்டிக்கேட்டு கொண்டிருப்பார்கள். மீண்டும் ஒரு போராட்டம் ஆரம்பிப்பதற்கு
முன்னர் எங்களுக்கான தீர்வினை சர்வதேசமும் புலம்பெயர்ந்த தமிழர்களும்
பெற்றுத்தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.