தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் நேற்று இரவு 11.30மணியளவில் ஒரு சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.
இச்சூறாவளிப் புயல் மென்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இப்புயல் திருகோணமலையிலிருந்து கிழக்காக 370கிலோ மீற்றர் தூரத்திலும், நெட்டாங்கு 9.2பாகை வடக்காகவும், அகலாங்கு 84.6பாகை கிழக்காகவும் மையம் கொண்டுள்ளது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை வீழ்ச்சி பதிவாகி வருவதனால், ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்து காணப்படுவதுடன் சில வீதிகள் தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடைப்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதால் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.