ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு அல்லது
முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்
ஏற்பாடானது, ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும், மாகாண சபை தேர்தலை
நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது என
ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
அரசியல்
யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை பகிர்ந்து, மாகாண சபை தேர்தல்
சட்டத்தில் அதற்கான திருத்தங்களை மேற்கொண்டு பாராளுமன்ற அனுமதியை பெற்று
மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு எமது கோரிக்கை அமைந்திருந்தது. அதை
ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு, அந்த மாகாண சபையில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை
மீள நிலை நிறுத்துவதற்கான சட்ட வரைபுகளை தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும்
தெரிவித்திருந்தார்.
அந்த
சட்ட வரைபுகளோடு தேர்தல் திருத்த சட்டத்தையும் பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்து அனுமதி பெற்று மாகாண சபைகளில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள
நிறுத்தி, மாகாண சபை தேர்தலை நடாத்தலாம் என உறுதிமொழி வழங்கியிருந்தார்.
ஆனால் இதுவரைக்கும் அந்த விடயங்கள் தொடர்பான தெளிவான கருத்துக்கள் எதுவும்
ஜனாதிபதியால் கூறப்படவில்லை.
இந்த
நிலையிலே ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்து மாகாண சபையை வழி நடத்துவதற்காக
ஜனாதிபதி எடுக்கின்ற முயற்சியும், அதை எமது தமிழர் தரப்பினரே அரசியல்
கோரிக்கையாக முன்வைத்திருப்பதும் கவலையளிக்கிறது.
ஜனாதிபதியுடைய
மாகாண சபை வழிநடத்தல் குழு என்பது அவரால் அமைக்கப்பட வேண்டிய ஒன்று, அதனை
நாங்கள் வலிந்து கேட்பது அவசியமற்றது. அது ஏற்கனவே ஒரு நிர்வாகம்
சம்பந்தப்பட்ட விடயம். நாங்கள் கேட்பது அரசியல் நிலைப்பாடு. அதாவது மாகாண சபை
தேர்தல்களை நடாத்த வேண்டும், பறிக்கப்பட்ட அதிகாரங்களோடு ஏற்கனவே
இருக்கின்ற அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒரு அரசியல்
கோரிக்கை.
ஆகவே நாங்கள்
இந்த அரசியல் கோரிக்கைக்கு புறம்பான ஒரு நிர்வாக ரீதியான ஆலோசனை சபையை
அமைக்கும் விடயத்தை கோரிக்கையாக, அதாவது அரசியல் கோரிக்கையாக முன்வைப்பது
அபத்தமானது ஆகும். அது ஜனாதிபதி அவருடைய தேவை கருதி எடுக்க வேண்டிய
நடவடிக்கை. ஆகவே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் அனைத்து தமிழ் தரப்பும் உறுதியாக இருக்க வேண்டும்.
மாறாக
தனித்து செயற்பட முற்படுகின்றபோது, எமது பிரதான கோரிக்கையான அதிகாரப்
பகிர்வு, மாகாண சபை தேர்தலை விரைந்து நடாத்துதல் என்ற விடயங்களுக்கு இவை
குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, தேர்தல்களைப்
பிற்போடுவதற்கு இதைப் பயன்படுத்துகின்ற அபாய சூழ்நிலை இப்போது
எழுந்திருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் தரப்பினர் பொறுப்பு கூற
வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.