வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சமூகம் ஊடக குழுமத்தின் விசேட கலையகத்தில் இன்று இரண்டாவது நாளாக பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறிப்பாக, நல்லைக் கந்தனின் சப்பைரதத் திருவிழாவான நேற்றைய தினம் முதல் நல்லூர் ஆலய முன்வீதியில் அமைக்கப்பட்ட சமூகம் விசேட கலையகத்திற்கு முன்னால் சிறுவர்களுக்கான பல்வேறுபட்ட போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தேர்த் திருவிழாவான இன்றையதினம் காலை முதல் சமூகம் ஊடக குழுமத்தின் விசேட கலையகத்தை பார்வையிட ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததுடன் ஊடகத்துறையில் தடம் பதிக்கும் ஆர்வத்துடன் உள்ள இளைஞர்,யுவதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் நோக்கில் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை, இன்று மாலை சிறுவர்களுக்கான சங்கீதக் கதிரை மற்றும் பலூன் உடைத்தல், பெரியவர்களுக்கான போட்டிகள் இடம்பெற்றதுடன் சிறுவர்களை மகிழ்விக்க பொம்மை நடன நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.