பதுளை - செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதியான சவுதி நிதியின் மூலம் கிண்ணியா குறிஞ்சாக்கேனி பாலம் நிர்மாணிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்
இப்பால நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று (27) பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில்,
குறிஞ்சாக்கேனி பாலம் நிர்மாணிப்புக்கான ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வீ. வீ கருணாரத்ன எண்ட் கம்பெனிக்கு வழங்கப்பட்டதுடன் அதன் நிர்மாணிப்பு பணிகள் மந்தநிலையில் காணப்பட்டன.
இதற்கு அப்போது காணப்பட்ட கொவிட் நிலைமை மட்டுமன்றி எதிர்பார்க்காதவாறு கணுக்களுக்கான செலவு அதிகரித்தமை, நிர்மாணிப்பு மூலப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு, அத்துடன் உரிய கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான தாமதம் காரணங்களாக அமைந்தன.
இந்த மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு உரிய ஒப்பந்தத்திற்குள் முகாமைப் படுத்திக் கொள்வதற்கு கடினமாக இருந்தமையால் அரசுக்கு ஏற்படும் நிதிசார் நட்டத்தை குறைத்துக் கொள்வதற்கு உரிய ஒப்பந்தத்தை இரு தரப்பு இணக்கப்பாட்டுடன் நிறைவு செய்யப்பட்டது.
இந்த பால நிர்மாணப்பணிகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது நிறைவு செய்யப்படும்.
இதற்கமைவாக பால நிர்மாணிப்பு பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை கவனத்தில் எடுத்துக் கொண்டு செலவுகளை குறைத்துக் கொண்டு பாலத்தை மீள நிர்மாணிப்பதற்கு தேவையான டெண்டருக்கான ஆவணங்கள் தயார்படுத்தப்படுகின்றன.
மே மாத ஆரம்பத்தில் இதற்கான டெண்டர் கோருவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் இரண்டு மாதத்திற்குள் நிர்மாணிப்பு பணிகளை ஆரம்பித்து ஒன்றரை வருடங்களுக்குள் நிர்மானிப்புப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.