யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 09 ஆம் திகதி 14 வயது நண்பர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தண்ணீர்தாங்கி வீதியால் வேகமாகப் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் இருந்த வேகத்தடுப்பு அணையுடன் இடறி இடது பக்கம் இருந்த மதிலுடன் மோதி பின்னர் வலது பக்கம் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
தலைக்கவசம் அணியாத இருவரும் அவ்விடத்தில் மயங்கிய நிலையில் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னால் இருந்து பயணித்த சிறுவன் தற்போதும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் சிகிச்சை பலனின்றி இன்று (14) அதிகாலை உயிரிழந்தார்.
இச் சம்பவத்தில் நாலாம் குறுக்குத் தெரு குருநகரைச் சேர்ந்த 18வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.