வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஆங்கில புது வருடத்தை முன்னிட்டு கண்காட்சியும் விற்பனையும் இன்று (02.12) வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர மற்றும் மேலதிக அராசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து விற்பனைக் கண்காட்சி கூடமானது அதிதிகளினால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களைப் பார்வையிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் இவர்களது முயற்சியை பாராட்டியதுடன், அவர்களது முயற்சியை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கக் கூடிய உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய அதிகாரிகளை பணித்திருந்தார்.
இக் கண்காட்சியில் பெண்கள், சிறு தொழில் முயற்சியாலயளர்கள், உட்பட பலர் தங்கள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தினர். இதன்போது விற்பனையும் இடம்பெற்றது.
வருடாந்தம் பிரதேச செயலகமும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் நடாத்திவரும் ' முயற்சியான்மை' விற்பனையும் கண்காட்சியுமானது இவ்வருடமும் புதுவருடம் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இக்கண்காட்சியில் கைத்தறி உற்பத்திகள், கைப்பணிப்பொருட்கள், விவசாய உற்பத்திகள், சேதனைப் பசளை உற்பத்திகள் மற்றும் உணவு உற்பத்திப் பொருட்கள் அடங்கலாக பெருமளவான உற்பத்திப் பொருட்களின் காட்சிக் கூடங்கள் என்பன நிறுவப்பட்டிருந்தன.