தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினருமான ஏ.எல்.அதாவுல்லா திருகோணமலை -தோப்பூர் பிரதேசத்திற்கு இன்று
வியாழக்கிழமை மாலை விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இவ் கலந்துரையாடல் தோப்பூர் -முமமைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இக்
கலந்துரையாடல் தோப்பூர் அல்லைக்குளத்தில் நீர் இல்லாமையால் வேளாண்மைகள்
பாதிப்பு, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகள்,வீதிப் பிரச்சினை,
தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல், எரிபொருள் நிலையம் இல்லாமல்
தோப்பூர் பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை,உட்கட்டுமான குறைபாடுகள்
உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக தோப்பூர் பிரதேச மக்கள் பாராளுமன்ற
உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
இப்பிரச்சினைகள்
தொடர்பாக கவனம் செலுத்தி உரிய தரப்பினரிடம் பேசி தீர்வுகளை பெற்றுத்தர
முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.அதாவுல்லா தோப்பூர் பகுதி
மக்களிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பில்
தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் டொக்டர்.ஷியா, கட்சியின்
உயர்பீட உறுப்பினர்கள், தோப்பூர் பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்
என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.