முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்துக்குக் காரணமாகச் செயற்பட்ட சரத் வீரசேகரவின் காலத்தில், வடமாகாணத்தில் அதிகளவான தமிழ் மக்கள் காணாமலாக்கப்பட்டிருப்பர் என்று எண்ணத் தோன்றுகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
யாழில் நேற்றையதினம்(29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில் இனவாதியான சரத் வீரசேகர தொடர்ச்சியாக இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தினார். எவரும் அவரைக் கட்டுப்படுத்தவில்லை.
நீதிபதிக்கு எதிராகவும் நீதிமன்றத்துக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து சிங்கள மக்களைத் தூண்டிவந்தார். இதன் விளைவாக நீதிபதி சரவணராஜா இன்று நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
செம்மணிப் படுகொலை புதைகுழி மீட்பின்போது செயற்பட்ட நீதிபதி அருள் சாகரனும் இவ்வாறு அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினார். இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து சிங்கள மக்களுக்கு உண்மையையும் யதார்த்தத்தையும் புரியவைப்பதற்கு இரண்டாம் மொழியறிவு எமக்குத் தேவைப்படுகின்றது.
இரண்டாம் மொழியறிவை தமிழர்களான நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதை முதல் தெரிவாகத் திணித்துப் பல வந்தப்படுத்தியபோது நாங்கள் எதிர்த்தோம். உண்மையில் நாங்கள் எதிர்த்தோம் என்பதைவிட எம்மை எதிர்க்கப் பண்ணினார்கள் என்பதுதான் இங்கு பொருத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.