மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலப்பரப்புக்கு உட்பட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்களை நடுவதற்கு , நேற்று திங்கட்கிழமை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வந்த நிலையில் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
திணைக்கள அதிகாரிகள் அங்கு வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி நின்றனர்.அத்துடன் மிகப் பிரதான இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் மக்கள் நேற்று மாபெரும் சிரமதான பணியையும் அன்னதான நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தமது நடவடிக்கைகளுக்கு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிந்த தொல்லியல் துறை அதிகாரிகள் ,திணைக்கள அதிகாரிகள் வெல்லாவெளி பிரதேச செயலத்துக்குச் சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அறிந்த மக்கள் பிரதிநிதிகள் ,தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்துவதற்கு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கையை கைவிடுமாறும், இவ்விடயம் தொடர்பில் கிராம மட்ட அமைப்புகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடம் அதற்குப் பின்னர் ஒருநாள் கலந்துரையாடுவது என தெரிவித்ததன் அடிப்படையிலும் அங்கிருந்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வெளியேறினர்.