இடமாற்றம் கிடைத்துள்ள திருகோணமலை, மூதூர் - பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரியின் அதிபரின் பணி இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7.00 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் 10.30 மணிவரை தொடர்ந்தது.பாடசாலை நுழைவாயிலுக்கு பெற்றோர்கள் பூட்டு போட்டிருந்ததோடு மாணவர்களும் பாடசாலை வளாகத்தினுள் செல்லாது வெளியில் நின்று போராட்டம் நடாத்தினர்.
பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் வலயக் கல்விப்பாளர் முனவ்வரா நளீம் போராட்டக்காரர்களிடம் பேசுவதற்கு அனுமதி கோரியதையடுத்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலையின் பெற்றோர் அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம்.மீண்டும் நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதிலளித்த மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் இது விடயத்தில் உங்கள் கருத்துக்களை மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இதன்பின் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம் கருத்து தெரிவிக்கையில்,
இன்றையதினம் பெற்றோர்களோடு கலந்துரையாடி கருத்துக்களை பெற்றுள்ளோம்.இது தொடர்பான அறிக்கையை மாகாண கல்விப் பணிப்பாளருக்கு சமர்பிக்கவுள்ளோம்.அடுத்த கட்ட நடவடிக்கையை அவர்கள் எடுப்பார்கள் என்றார்.