ஊவா – குடாஓயா கொமாண்டோ பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியின் போது 28 வயதுடைய நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
தியத்தலாவை பிரதேசத்தில் வசிக்கும் இவர், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பொறியியலாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
ஜூலை 06ஆம் திகதி ஊவா-குடாஓயா கொமாண்டோ பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தலைமைத்துவ நிகழ்ச்சியில் உயிரிழந்தவர் உட்பட நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவொன்று பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது, குழு ஜிப்லைனிங் உட்பட பல நடைமுறை நடவடிக்கைகளில் பங்கேற்றது.
பாதிக்கப்பட்டவர் ஜிப்லைனிங் நடவடிக்கையில் கடைசியாக பங்கேற்ற நிலையில், கீழே உள்ள ஏரியில் விழுந்துள்ளார்.
ஏரியின் சேறும் சகதியுமான பகுதியில் விழுந்து உயிரிழந்தவரைக் கண்டுபிடிக்க இராணுவத்திற்கு கிட்டத்தட்ட 3 முதல் 4 நிமிடங்கள் தேவைப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞனை உடனடியாக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உயிரிழந்தவரின் இறுதி கிரியை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.