தேசிய விளையாட்டு நிதியத்திலிருந்து கிழக்கு மாகாண விளையாட்டு
அபிவிருத்திக்கு 5 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதாக விளையாட்டு
மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார்.
“ஆரோக்கியமான
தலைமுறை பலம்வாய்ந்த தேசம்” எனும் தொனிப்பொருளில் விளையாட்டு மற்றும்
இளைஞர் அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய விளையாட்டு திட்டமிடல்
மற்றும் ஒருங்கிணைந்த தேசிய இளைஞர் திட்டமிடலை கிழக்கு மாகாணத்தில்
நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில்
(10)அமைச்சரின் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்குறித்தவாறு
தெரிவித்தார்.
மாகாண விளையாட்டு சபையை
வலுப்படுத்தி அனைத்து பங்குதாரர்களையும் ஒரேமேசைக்கு அழைத்து குறித்த
விடயங்களை கலந்துரையாடி தீர்வுகளை நோக்கி செல்ல வேண்டும். கிராமிய
பிரதேசங்களில் உள்ள இளைஞர் யுவதிகள் விளையாட்டுத்துறையில் திறமைகளை
வெளிக்கொணரும்போது அவர்களை இனங்கண்டு தேவையான பயிற்சிகள் மற்றும்
வசதிவாய்ப்புக்களை வழங்கும் நோக்கிலேயே இவ்வேலைத்திட்டம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கான பாடநெறிகளை தேசிய இளைஞர்
சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கும்போது சலுகை அடிப்படையில் அவற்றை
மேற்கொள்ளவதனை அவதானத்தில் கொள்ளுமாறும் பாடநெறிகளின் உள்ளடக்கம் தொழில்
சந்தைக்கு வேண்டப்படும் வகையில் வடிவமைத்து மேற்கொள்வதன் அவசியம்
குறித்தும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், முன்னாள் அமைச்சரும் தேசிய
விளையாட்டு பேரவை தலைவருமான அர்ஜுன ரணதுங்க, முன்னால் குறுந்தூர ஓட்ட
வீராங்கனையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான சுசந்திகா ஜயசிங்க, கிழக்கு
மாகாண பிரதம செயலாளர் ஆர். எம்.பி.எஸ்.ரத்னாயக்க, திருகோணமலை மாவட்ட
அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் கலாமதி பத்மராஜா,கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர்
எச்.ஈ.எம்.டபிள்யு.திசாநாயக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர்,முப்படை, பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், விளையாட்டு
அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.