திருகோணமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 17ஆம் திகதி திருகோணமலை கொழும்பு வீதியினூடாக திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பயணித்தவேளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தின்பேரில் இரு பெண்கள் உட்பட ஆறு பேரையும் கடந்த 18ம் திகதி கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேநேரம் குறித்த வழக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஐப்பசி மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளை இட்டார்.